Monday, November 26, 2012

சேர மன்னனுக்கும் பொன்னிக்கும் காதல் மலர்ந்த கதையையும் அது வெண்ணிப்பறந்தலையில் முடிந்ததையும் விளக்கி எழுதுக.



சேர  மன்னனுக்கும் பொன்னிக்கும் காதல் மலர்ந்த கதையையும் அது வெண்ணிப்பறந்தலையில் முடிந்ததையும் விளக்கி எழுதுக. 

    காவிய நாயகி நாடகம் இரா.பழனிசாமியின் கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நூலாகும்.வெண்ணிக்குயத்தியாரின் புறநானூற்றுப் பாடலை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்ட இந்நாடகம் காதலையும் வீரத்தையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.அவ்வகையில் பெருஞ்சேரலாதன், பொன்னி ஆகிய இருவரின் காதல் நாடக கதை ஓட்டத்திற்கு பெரும் துணை புரிந்துள்ளது. 

    பெருஞ்சேரலாதன் சேரநாட்டு மன்னனாவான்.தன் நாட்டின் சிற்றூர் மக்கள் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் விதத்தினைக் காண விழைகிறான்.அதன் பொருட்டு அவனும் அமைச்சரும் மாறுவேடமிட்டுச் செல்கின்றனர்.அவ்வேளையில் சோழ நாட்டின் வெண்ணிப்பறந்தலை எனும் ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேரநாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்புக்கிணங்க அறுவடைத்  திருநாளைக் கொண்டாட தன் தங்கையின் அழைப்புக்கிணங்க அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார்.பொன்னி காட்டு வழியில் இயற்கை அழகை இரசித்த வண்ணம் தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டு வருகிறாள். அப்பொழுது குதிரையில் வந்த பெருஞ்சேரலாதனையும் அவன் அமைச்சரையும் கண்ட மருதவாணர் அவர்கள் கள்வர்கள் என்று அஞ்சுகிறார். மருதவாணரும் பொன்னியும் மரத்தின் பின்னால் மறைந்து கொள்கின்றனர். அதைக் காணும் பெருஞ்சேரலாதனும் அமைச்சரும் அவர்கள் இருவரையும் விசாரிக்கின்றனர்.

   மருதவாணரும் பொன்னியும் வரும் வழியில் பாண்டியநாட்டுப் பிரான்மலைக் கள்வர்கள் அவர்களின் வழிப்பயணத்திற்காக வைத்திருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர்.அவ்வேளையில் பொன்னியின் அழகைக் கண்டு பெருஞ்சேரலாதனும் அவனைக் கண்டு பொன்னியும் மயங்குகின்றனர். பின்பு அமைச்சரும் மருதவாணரும் அருகில் இருப்பதை உணர்ந்து இருவரும் சமாளித்துக் கொள்கின்றனர். கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக எழுந்த விவாதத்தினைத் தொடர்ந்து பெருஞ்சேரலாதன் பொன்னியின் சுவடிகளைக் கொண்டு சென்று அவற்றை ஆராய்ந்து மறுநாள் தீர்ப்புரைப்பதாகக் கூறுகிறான். பொன்னியின் அத்தை வீட்டைத் தெரிந்து கொண்டு புறப்படுகிறான். 

    பின்பு, பெருஞ்சேரலாதன் தனது மாளிகையில் பொன்னியின் நெருப்பு என்ற கவிதைச் சுவடிகளை வாசித்து அவள் மனத்தில் இடம்பிடிக்க எண்ணி மீண்டும் மாறுவேடத்தில் செல்ல மெடிவெடுக்கிறான்.தன் எண்ணத்தை அமைச்சரிடம் கூறுகையில் அவரோ, மண்வினைஞர் குலத்தில் பிறந்த பொன்னி மன்னருக்குப் பொருத்தமில்லை என்று கருத்துரைக்கிறார். அன்பிற்கும் குலத்திற்கும் தொடர்பில்லை என்று கூறும் மன்னன் பொன்னியைச் சந்திக்கச் செல்கிறான். இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

  பொன்னியின் தந்தை மருதவாணர் தன் மகளைத் தேடிக்கொண்டு இருக்கையில் பெருஞ்சேரலாதன் மருதவாணரைச் சந்தித்து, பொன்னியும் தானும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும் அவரின் சம்மதத்தோடு பொன்னியை மணக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அதுவரையில் தங்கள் காதல் களங்கமற்றதாக இருப்பதற்கு உறுதியளிக்கிறான்.

     பின்பு, சோழநாடு திரும்பிய பொன்னிக்குப் பெருஞ்சேரலாதன் ஓர் ஆண்டிற்குள் பெண்கேட்டு வருவதாக ஒருவர் மூலம் சொல்லி அனுப்புகிறான். இதற்கிடையில், சோழமன்னன் கரிகாலன் மண்வெறி கொண்டு சேரநாட்டின்மீது போர்த் தொடுத்திருப்பதால் தன் தாய் நாட்டைக் காக்கும் போரில்ஈடுபட்டபின் பொன்னியைச் சந்திப்பதாகப் பெருஞ்சேரலாதன் ஓலை அனுப்புகிறான். தன் காதலனே என்றாலும் தன் நாட்டு மன்னனை மண்வெறி கொண்டவன் என்று கூறியதைப் பொன்னியால் சகித்துக் கொள்ள முடியாமல் கோபமடைகிறாள்.

வெண்ணிப்பறந்தலையில் சேரமன்னனின் படைகள் குவிந்திருப்பதைக் கேள்வியுறும் பொன்னி, தாய்நாட்டுப் பற்றின் காரணமாகச் சேரமன்னனை வசைப்பாடச் செல்கிறாள்.அங்குதான் வீரன் என்று காதலித்த தன் காதலன்தான் சேரமன்னன் என்ற உண்மையினை அறிந்து அதிர்ச்சியிஉல் உறைந்து போகிறாள்.காதலா, நாட்டுப்பற்றா என்ற கேள்வியில் இருதலை கொள்ளி எறும்புபோலத் திண்டாடுகிறாள். கொற்றவை கோயிலுக்குச் சென்று இருவரும் போரில் சமாதானமாகப்போய்விட வேண்டுமென வேண்டுகிறாள்.

   விதி வலியது என்தற்கொப்ப வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதநின் மார்பில் பாய்ந்து முதுகுவரைச் சென்று புறப்புண்ணை ஏற்படுத்து விடவே, தன்மானம் காக்க பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர்விட முடிவெடுக்கிறான். செய்தியறிந்த பொன்னி அலறித்துடித்துப் போர்களத்திற்கு ஓடி வருகிறாள்; மருதவாணரும்அவளைப் பிந்தொடர்கிறார்.மருதவானர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் குங்குமத் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக் கொள்கிறான்; தன் மானங்காக்க வேண்டுமாய் அவளிடம் உறுதிமொழிப் பெற்று  உயிர் துறக்கிறான்.

   ஆகவே, இந்நாடகத்தில் பெருஞ்சேரலாதன் பொன்னியின் காதல் களங்கமற்றதாகவும் புனிதமாகவும் காட்டப்படுள்ளது. இவர்களின் காதல் காவிய நாயகி நாடகத்தை உயிர்ப்பித்த வேளையில் வாசகர்களின் மனத்தில் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் என்பது வெள்ளிடைமலை.

                                       மேனகா த/பெ மணியம்
SMK Taman MutiaraRini
Skudai, Johor Bahru

மோகினி– பாரதி இருவரையும் ஒப்பிடுக.



மோகினி– பாரதி இருவரையும் ஒப்பிடுக.

சமூக நாவல் எழுதுவதில் தனித்திறம் பெற்ற எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.அவரது சிந்தனை ஓடையில் மலர்ந்திட்ட நாவல்களுள் ஒன்றே பொன் விலங்கு ஆகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞ தன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல்சுவைபடச் சொல்கிறது. இந்நாவலில் மோகினி, பாரதி என இரு துணை கதைப்பாத்திரங்கள் இந்நாவலுக்கு மேலும் மெருகூட்டுகின்றனர்.இவ்விருவரிடையே பல ஒற்றுமை வேற்றுமைகளைக் காண இயலுகிறது.

   அவ்வகையில், ஒற்றுமை எனப் பார்க்கையில் இருவருமே சத்தியமூர்த்தியைக் காதலித்த பெண்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.சத்தியமூர்த்தியின் நற்குணங்களையும் அறிவாற்றலையும் கண்டு தங்கள் மனத்தைப் பறிக்கொடுத்தனர்.  பாரதி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நேர்முகத்தேர்வின் போதும் மோகினி இரயில் பயணத்தின் போதும் சத்தியமூர்த்தியை முதன்முதலில் கண்டபோதே   விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாகி போனான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின்பால் ஆழமான அன்பைக் கொண்டிருந்த இருவரும்  பல வேளைகளில் தங்கள் அன்பை வெளிப்படையாகக் காட்டினர். 

   மேலும், பாரதியும் மோகினியும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆதரவை இழந்தவர்கள். கணிகையர் குலப்பெண்ணான மோகினி, தன் தாய்முத்தழகம்மாளின் ஆதரவில் வாழ்ந்தவள். தாய்ப்பாசமற்ற முத்தழகம்மாளின் ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையேயும் தனக்கும் ஓர் உறவுண்டு என்று சொல்லிக் கொள்ளும் அளவில் மோகினிக்கு அவள் தாய் இருந்தாள். ஆனால், தன் தாயை கார் விபத்தில் இழந்த மோகினி சிறகு இழந்த பறவை போல் ஆனாள்; மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் கூண்டுக்கிளியாகிறாள். அதே வேளையில், பாரதியோ சிறு வயதிலேயே தாயை இழந்தாலும் அக்குறை தெரியாமல் தந்தை பூபதியின் அரவணைப்பில் வளர்ந்தவள். ஆனால், விதிவசத்தால் பத்மஸ்ரீ விருதைப் பெற டில்லிக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால் பூபதி இறந்து போகிறார். தந்தையின் இறப்பு  பாரதியை வெகுவாகப் பாதிக்கிறது. கொழு கொம்பற்ற கொடி போல பாரதியும் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டியதாயிற்று.

     இதுமட்டுமின்றி, இருவருமே பிறருக்கு உதவும் மனப்பான்மையைக் கொண்டவர்கள். ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வரவழைக்கப்பட்டு மல்லிகைப்பந்தலில் பாரதியுடன் ஒரே மாளிகையில் தங்க வைக்கப்படுகிறாள். பாரதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் தருவாயில் ஒரு தாய் போல் இருந்து கண்ணுங்கருத்துமாகக் கவனித்து எல்லா பணிவிடைகளையும் செய்கிறாள் மோகினி. அதே வேளையில் பாரதியோ தன் காதல் நிறைவேறாமல் போனாலும் மோகினியும் சத்தியமூர்த்தியும் வாழ்வில் இணைசேர பல உதவிகளைச் செய்ய முன்வருகிறாள். அதன்படி மோகினியின் மீது வீண்சந்தேகம் கொள்ளும் சத்தியமூர்த்திக்கு உண்மை தெரியவருவதற்காக மோகினியின் கடிதத்தைச் சேர்க்கப் பெரும் முயற்சி செய்கிறாள்.

   இவ்வாறாக இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேற்றுமைகளும் இருக்கும் வண்ணம் நாவலாசிரியர் படைத்துள்ளார். இருவருமே வெவ்வேறு குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். மோகினி தாசிக்குலத்தில் பிறந்து சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத , ஒதுக்கப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்தவளாகத் திகழ்கிறாள். அன்பான தாய்தந்தை, உடன்பிறப்பு, தோழர்தோழியர், அண்டை அயலார்  என இயல்பான மனித சமுதாயத் தொடர்பைப் பெற இயலாத அபலைப் பெண்ணாக விளங்குகிறாள். பணத்தாசைக் கொண்ட தாய் முத்தழகம்மாளின் பிடியில் சிக்கி அனுதினமும் நரக வாழ்க்கையில் செத்துச் செத்துப் பிழைக்கிறாள். தன் மன உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த ஆள் கிடையாமல் இறைவனிடமே சரணாகதி அடைகிறாள்;அன்புக்கும் ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் ஏங்கித் தவிக்கும் பெண்ணாக வாழ்கிறாள். ஆனால், பாரதியோ தொழிலதிபர் பூபதியின் ஒரே செல்வ மகளாகப் பிறந்து இன்ப வாழ்வு வாழ்கிறாள். தந்தை பூபதியின்  பாச மழையில் நனைந்து விருப்பப்பட்டதெல்லாம் கிடைக்கும் பேறு பெற்றவளாக விளங்குகிறாள். தமிழ்த்துறையில் சேர்ந்து படிக்க விரும்பிய அவளது ஆசைக்குப் பூபதி முட்டுக்கட்டை போடாததை இதற்கு நற்சான்றாகக் கூறலாம். கல்லூரிப் படிப்பு, தோழியர், சுதந்திரம் என நல்வாழ்வு வாழ்கிறாள்.

இதனைத் தவிர்த்து,  மோகினி – பாரதி இருவருக்குமே சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் வேறுபடுகின்றனர். ஆட்படுத்தும் அன்பு கொண்ட மோகினி சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் வெற்றி அடைந்து அவன் மனத்தில் நித்திய சுமங்கலியாக வாழும் பேற்றைப் பெறுகிறாள். குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஒழுக்கத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் மோகினியின் அன்பு சத்தியமூர்த்தியை விட்டுவிலக முடியாத பொன்விலங்காகக் பிணிக்கிறது. இதன் காரணமாகவே பாரதி சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் தோல்வி அடைகிறாள். பாரதியின் அன்பை ஆளவிரும்பும் அன்பாகவே நினைக்கும் சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறான். மோகினியைத் தன் மனத்தில் மனைவியாக வரித்துக் கொண்ட சத்தியமூர்த்தி மற்றொரு பெண்ணுக்குத் தன் மனத்தில் இடமில்லை  என்பதை மெய்ப்பிக்கவே பாரதி எழுதிய கடிதங்களை கிழித்தெறிகிறான். 

     இறுதியாக, இருவரும் சிக்கல்களை எதிர்நோக்கும் மனத்திடத்தில் மாறுபடுகின்றனர்.மோகினி மனத்திடம் குறைந்தவளாகவும் அடிமை வாழ்விலிருந்து மீள முடியாதவளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.முதலில் தன் தாயின் கடுஞ்சொற்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள். தாயின் இறப்பிற்குப் பின்பு மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள்ளாகிய நிலையில் அவரது அத்துமீறலாலும் சத்தியமூர்த்தியின் வெளிநாட்டுப் பயணத்தாலும் நிலைக்குலைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் பாரதியோ, காதல் தோல்வி, தந்தையின் இறப்பு என தொடர் சிக்கல்களால் மனம் பாதிக்கப்பட்டாலும் மனத்திடத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். எனவேதான், சத்தியமூர்த்தியையும் மோகினியையும் இல்லற வாழ்வில் இணைத்து வைக்கப் போராடுகிறாள்; கோழைத்தனமாகத் தற்கொலை செய்துகொள்ளாமல் உறுதியுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

    ஆகவே, நா. பார்த்தசாரதியின் கற்பனை சிற்பங்களாக மோகினியும் பாரதியும் விளங்கினாலும் நாவலின் நோக்கத்தை வெற்றியடையச் செய்வததில் பெரும் பங்காற்றியுள்ளதோடு இன்றையப் பெண்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக உள்ளனர் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

                                               லாவண்யா த/பெ சுதாகர்
SMK Taman Selesa Jaya
Skudai, Johor Bahru

Thursday, November 22, 2012

“ நீ உயர “ எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கிறாய் என்பதை விளக்கி எழுதுக



நீ உயர எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கிறாய் என்பதை விளக்கி எழுதுக


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.




   கவிதை தூரிகையால் எழில் ஓவியம் தீட்டும் வல்லமை படைத்தவர் அருந்தமிழ்க் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள். அவரின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த நீ உயர எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்தைப் பொருத்தே அமையும் என்ற உன்னத கருத்தினை மையமிட்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது.

    ஒருவருக்கொருவர் சளையாது போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தானும் உயரத் துடிக்கும் ஓர் இளைஞனைப் பார்த்து கவிஞர் முதலில் ஆர அமர உட்கார்ந்து கொஞ்சம் சிந்திக்குமாறு வேண்டுகிறார்.வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டிய துடுப்பு உள்ளமே எனக் கூறும் கவிஞர் முதலில் அவ்வுள்ளத்தை ஒழுங்குப்படுத்துமாறு வலியுறுத்துகிறார். எண்ணம்தான் நம்மை ஆள்கிறது என்ற உளவியல் ஆய்வாளர்கலின் கருத்துப்படியே கவிஞரின் பேனா முனையும் கோலமிட்டுள்ளது.

  இயல்பு வாழ்க்கையில் குளத்தில் உள்ள தாமரைச் செடி குளத்தின் நீர் அளவுக்கு உயர்ந்து நிற்கும்; நீர் வற்றினால் தாமரைச் செடி அழியும் ; புது வெள்ளத்தில் மீண்டும் தழைத்து வளரும். அது போலவே வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு என்ற பொய்யாமொழிப்புலவரின் அமுத வாக்கினைக் கருத்தில் கொண்டு உள்ளம் உயர்ந்தால் வாழ்க்கையும் உயரும் என்ற என்கிறார். மேலும், அத்தகைய உயர்வினைப் பெறுவதற்குத் திருக்குறள் உதவும் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.மாந்தனின் வாழ்க்கை உயர்வுக்குத் திருக்குறள் பெரும் பயனை விளைவிக்கும் அரிய நூலாக விளங்குகிறது என்பதனை நம்மை உணர வைத்துள்ளார்.

      தொடர்ந்து, “ எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும் என்று கவிஞர் விளக்கியுள்ளார்.அதற்கு எதிர்மாறாக வஞ்சக எண்ணம் கொண்டு சுயநலத்துடன் பொறாமை குணத்துடன் வாழ்ந்தால் இந்த உலகமே நம்மை வெறுக்கும் என்ற உண்மையினையும் கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

     இதுமட்டுமல்லாது, நாம் உள்ளத்தில் விதைக்கும் எண்ண விதைகளே பின்னர் செயலாக முளைக்கின்றன என்று உள்ளத்தை விளைநிலமாகக் கவிஞர் உருவகப்படுத்தியுள்ளார்.அத்தகைய விளைநிலத்தில் நல்ல எண்ணங்களை விதைக்காமல் போனால் அது பயனற்ற பள்ளம் போன்று ஆகிவிடும் என்று நினைவுறுத்துகிறார். காலம் எனும் ஆழியில் மூழ்கிவிடாமல் மனிதன் புகழுடம்புடன் வாழ வேண்டுமெனில் தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை உள்ளத்தில் பதியமிட வேண்டும் என்பதானது சிந்தனைக்கு விருந்தாகிறது.

    இறுதியாக, விதைக்கப்பட்டதே முளைக்கும் என்ற மறுக்க முடியாத இயற்கையின் விதியைப் புரிந்து கொண்டு நாம் முரணான வழிகளைக் கைவிட்டு நல்ல மனப்போக்கைக் கொண்டிருந்தால் நமக்கு உலகமும் வாழ்க்கையும் புதியனவாக விளங்கும் என்ற கருத்தினையும் கவிஞர் நமக்குப் பரிமாறியுள்ளார்.புதிய உதயத்தை நோக்கி எழுச்சியுடன் நடைபயில வருமாய் கவிஞர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.எனினும், அறிவுரைகள் மட்டும் ஆயிரம் குவிந்து அதைக் கேட்டுத் திருந்தும் மனம் இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடுமென்பது திண்ணம். 

   ஆகவே, நாம் சுவற்றில் எறியும் பந்து நம்மை நோக்கியே திரும்பி வருவது போல ஒருவரின் செயலுக்கு அடிப்படையாக அமைவது அவரின் எண்ணமே என்பது ஆன்றோரின் அமுதவாக்கு. இதனை நாம் சிந்தையில் தெளிந்து வாழ்வில் வெற்றிக் கனிகளைக் கொய்க வேண்டுமென்பதே கவிஞரின் அவா.